முதுகுளத்தூர் படுகொலை
முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் ஜாதி மற்றும் தேர்தல் அரசியல் - கா.அ. மணிக்குமார் (தமிழாக்கம்: ச. சுப்பாராவ்)
அசமத்துவம் தான் புரட்சிகளுக்கான முக்கியமான உலகளாவிய காரணமாகும். அரசியலில் கீழே இருப்போர் சமமானவர்களாக தாம் மாற கிளர்ச்சி செய்கிறார்கள். சமமானவர்கள் தாம் உச்சிக்குச் செல்ல கிளர்ச்சி செய்கிறார்கள் - அரிஸ்டாட்டில்.
சாதியப் படிநிலையானது ஒவ்வொரு காலகட்டங்களின் மாறுதலுக்கேற்ப தன்னைக் கூர்மைப்படுத்திக் கொண்டே வருவதை அதன் தொடர் நிகழ்வுகளால் அறியமுடியும். அரசியல் மற்றும் பொருளாதார வலிமைபெற்ற பெரும்பான்மைச் சமூகங்கள் எப்போதும், ஒருபுறம் தன்னைவிட வலிமை குன்றியவர்களிடத்தில் தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்து கொண்டேயிருக்கும்; மறுபுறம் ஒடுக்கப்படுபவர்களின் பிரதிநிதிகளாகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் முதன்மை வகிக்கும். இன்றளவும் தங்களது மேட்டிமைப் புத்தியால், 'நாங்கள் இல்லையென்றால், நீங்களெல்லாம் வளர்ந்திருக்க முடியாது' என்கிற தொணியில் வெளிப்படும் ஆணவக் குரல்களை ஆங்காங்கே காணமுடியும். இதுபோன்ற பல்வேறு அடக்குமுறைகள் வெளிக்கிளம்பும் போதெல்லாம், அதற்கு நேர்மாறான எதிர்ப்புகளும் கருத்தியல் / போராட்ட வடிவத்தில் வெளியாகிவிடும். இதனை வரலாறெங்கிலும் காணலாம். இந்த எதிர்ப்புச் செயல்பாடானது ஒடுக்கப்படும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பயன்படுவதோடு நின்றுவிடாமல், மற்றவர்களுக்கும் உதவும்படியாக அமைவதே ஆகச்சிறந்த வெற்றியாக அமையும். மாறாக, அது குறிப்பிட்ட பிரிவினரிடையே சர்வாதிகாரப் போக்கை உண்டாக்குவது மேலும் பிரிவினைகளுக்கே வழிவகுத்துவிடும். இந்தப் பிரிவினைகளே மீண்டும் மீண்டும் சாதி ஒழிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு, தாம் ஒடுக்கப்படுவதற்கு எதிராக, எதிர்க்குரல் எழுப்பிய சமூக வரலாற்று நிகழ்வினையே இந்தப் புத்தகம் பதிவு செய்துள்ளது.
1957இல் தென்தமிழகத்தின் இருபெரும் பிரிவுகளான மறவர் - பள்ளர் சமூகங்களுக்கு இடையே உருவான சாதிய மோதல்கள் அன்றைய அரசியல் சூழலையும் சமூகச் சூழலையும் மாற்றியமைத்தது. முத்துராமலிங்கத் தேவர் மற்றும் இம்மானுவேல் சேகரன் இருவரிடையுயேமான சந்திப்பு பல மோசமான விளைவுகளை உருவாக்கியது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் சமத்துவத்தை ஏற்க மறுத்த ஆதிக்கச் சாதியினருக்கு எதிரான பள்ளர் சமூக மக்களின் போராட்டங்களும் எதிர்வினைகளும் சிறிதுசிறிதாகத் தங்களின் அடிமைத் தளைகளை உடைத்தெறிந்தது. அவ்வாறு பெரும் உயிர்ச் சேதங்களாலும் பொருட் சேதங்களாலும் நிரப்பப்பட்ட இந்நிகழ்வானது 'முதுகுளத்தூர் கலவரம்' என்று வரலாற்றில் பதியப்பட்டு, இருபிரிவினராலும் அவ்வப்போது மீள் கவனம் கொள்ளப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்த விரிவான முதல் ஆய்வு, முதுகுளத்தூர் படுகொலை எனும் இந்நூல்.
- இதில் பல காலங்களாக முக்குலத்தோர் - நாடார் - பள்ளர் ஆகிய மூன்று பிரிவுகளுக்கிடையே, உரசலுக்குள்ளான பகைமை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
- குறிப்பாக, ஆதிக்கச் சாதியின் அடக்குமுறையால் பள்ளர் சமூக மக்கள் அடைந்த துன்பங்கள் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
- மேலும் தென்தமிழகப் பகுதிகளில் இயங்கிய கிறித்தவ மிஷனரிமார்கள் குறித்தும் பள்ளர் சமூகப் போராளியாக உருவெடுத்த இம்மானுவேல் சேகரன், மற்ற சமூகச் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து, அம்மக்களது கல்வி / பொருளாதார முன்னேற்றத்திற்குப் போராடிய வரலாற்றினையும் இதன்வழி அறியலாம்.
சமூக மற்றும் அரசியல் ஆர்வமுள்ள யாவரும் அக்காலகட்ட அரசியலின் திசைவழிப் போக்கினை அறிந்துகொள்ள இந்நூலை வாசிப்பது அவசியம்.
![]() |
நூலின் அட்டைப் படம் |
Comments
Post a Comment