அகழ்வாரைப் பொறுத்தல்
எங்கள் இறக்கைகளைப்
பிய்த்துவிட்டு
போராடச் சொல்லி வகுப்பெடுக்கிறாய்..
எங்கள் குரல்வளையை
நெறித்துவிட்டு
குரலற்றவர்க்காய் கொடி பிடிக்கிறாய்..
எங்கள் நிலங்களைப்
பிடுங்கிவிட்டு
இது தமிழர் மண் என கோசமிடுகிறாய்..
ஆதிக்க ருசியில் திளைத்த
உன் அப்பனுக்கும்
தந்திரத் திட்டங்கள் வகுத்த
உன் தாத்தனுக்கும் சொல்..
தாழிட்ட அக்கதவுகளின்
பின்னெழும் இரைச்சல்
என் விடுதலை முழக்கம்..
விலங்கிட்ட அக்கைகள்
கொட்டும் பேரிகை
என் விடுதலை இசை..
நரம்பறுத்த அக்கால்கள்
நடத்தும் பாய்ச்சல்
என் விடுதலை ஆட்டம்..
நிலமதன் பொறுமை
அகழ்வாரைப் பொறுத்தலில் இல்லை..
காய்ச்சிய பறையின்
இறுகிய சவ்வினைப் போல்
நாங்கள் அதிரப் பொருதும் வேளை
உன் பரம்பரையின்
அதிகார ஆணவம்
தொங்கவிட்டுத் தோலுரிக்கப்படும்..
- அலாதிப் பிரியன்
Comments
Post a Comment