நண்பனுக்கோர் வாழ்த்துரை..
தன்னோடு பொருந்திப் போகும் எந்தவொரு படைப்பும் வாசகனிடம் எளிதில் மையங்கொண்டு விடும் என்பதற்கு, காதல்சார் படைப்புகள் பலவும் உதாரணங்களாகும். காதலின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த கவிதை ஒரு சிறந்த கருவி; ஆனால், அக்கருவி எல்லோர் கைகளிலும் எளிமையாக அகப்பட்டு விடுவதில்லை. தமிழ்ச் சூழலில் கவிதை இலக்கியத்திற்கெனத் தனித்த ஓரிடம் உண்டு. ஒரு கவிதையின் பாடுபொருள், வெளிப்படுத்தும் உத்திமுறை, கலைச்சொற்கள், குறியீடுகள் போன்றவற்றைப் பொருத்தே அது சிறப்பு பெறும். தமிழ்க் கவிதை அமைப்பானது புதுக்கவிதை மரபில் உள்நுழைந்த பின்னர் பல்வேறு பரிசோதனைகளுக்குத் தன்னைக் களமாக்கிக் கொடுத்தது. கவிஞர்கள் பலரும் இதழ்கள் வாயிலாகக் கவித்துறைக்குத் தனிப் பொலிவூட்டியதெல்லாம் அதன் வரலாறு.
![]() |
கவிதை நூலின் அட்டைப் படம் |
இத்தகைய தொடர்ச்சியில் கவிதை இலக்கியத்தை மக்கள் மயமாக்கியதில் பலருக்கும் பங்குண்டு. இதன் காரணமாகவே கவிதை எழுதும் முயற்சி பலரிடமும் பல்கிப் பெருகியது. புதிதாக எழுத வருபவருக்கு அவ்வடிவத்தைச் சோதித்துப் பார்ப்பது ஒருவகைப் பொழுதுபோக்காகவும் மாறிப் போனது. தூது அனுப்பப்படும் காதல் கடிதங்கள் பலவும் புதுக்கவிதைகளைத் தாங்கியே பறந்து சென்றன. 1980, 1990களில் பிறந்த நபர்களுள் கவிதை எழுதுவோருக்குத் தனிச் சிறப்புண்டு; அதிலும் காதல் கவிதை வடிப்பவர்களுக்கே பிரதான மரியாதை. பழங்காலத்தில் ஓலையில் எழுதி செய்தி அனுப்புவதைப் போல, இந்நூலாசிரியரும் தனது அன்பிற்குரியவருக்கு 'முடங்கல்' எனும் தொகுதியாக இக்கவிதைகளைத் தூது அனுப்புகிறார். புதுக்கவிதைப் பரப்பிற்குள் புதிதாய் நுழைந்த நூலாசிரியர் எழில், சென்னைப் பல்கலைக்கழகம் எனக்குக் கையளித்த நல்லதொரு நட்பு. கடந்த 2018ஆம் ஆண்டு இதழியல் துறை நடத்திய, 'முற்றம்' என்றதொரு கலைப் பயிற்சிப் பட்டறையினூடாகவே நாங்கள் சந்தித்தோம். அன்றிலிருந்து இன்றுவரை பல்வேறு சந்திப்புகளும் சிற்சில உரையாடல்களுமே எங்கள் நட்பிற்கான பாலமாய் அமைந்துபோனது. நிகழ்த்து கலைகளில் ஆற்றல் மிகுந்த நண்பர், இன்று கவிதைக் கலையினையும் கைப்பற்றியுள்ளமை பெரும் மகிழ்வை அளிக்கிறது.
'கவிதை எழுதத் தேவை, அடிப்படையில் ஒரு காதல்' என்பது எழுதப்படாததொரு விதியானதை எங்கள் வயதொத்தவர்கள் அறிவர். பருவம் வந்ததும் முளைக்கின்ற காதலுக்கு, கவிதையே ஒரு நல்ல தீனி. சொல்லிச் சொல்லி மாளாது இன்னும் கவிதைகளுக்காய் வேண்டி நிற்கும் எத்தனையோ காதல்கள் இம்மண்ணில் ஏராளம். அப்படித்தான் உருவாகியுள்ளது இந்தக் கவிதைத் தொகுப்பும்.. கவிஞரின் காதல் கால நினைவுகளில் சுவடுகளாய்த் தேங்கி நின்று சிதறிய வார்த்தைகளே இன்று நம் கைகளில் புத்தகமாகத் தவழ்கிறது. அவர் ஒவ்வொரு கணத்திலும் தான் தீண்டிய சுகதுக்கங்களையும் அனுபவங்களையும் கவிதையாக்கி அளித்துள்ளார். இது அவரது முதல் முயற்சியாதலால் வாழ்த்தி வரவேற்பது நமது கடமை. அவருக்கு நம் வாழ்த்துகள்.! கவிதைக்குச் சொற்சிக்கனம் மிகவும் அவசியம். தனது காதலைப் போலவே சொற்களையும் சிக்கனமின்றிப் பயன்படுத்தியுள்ளார் கவிஞர். சில கவிதைகள் உரைநடையைப் போலே நீள்கின்றன. இவையெல்லாம் வருங்காலங்களில் சீர்செய்யும் நோக்கில் கவனப்படுத்தப்பட வேண்டியவை. அதைப்போலவே, காதல் கவிதைகளை மட்டுமே மையமிட்ட இத்தொகுப்பைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் சமூகம் குறித்தான புரிதல்களுடன் தனது படைப்புகளை நெறிப்படுத்த வேண்டுமென்பதும் எனது கருத்து. வாழ்த்துவதோடு நின்றுவிடாமல் வழிநடத்த வேண்டியதும் நட்பிற்கு அழகாதலால் இக்கருத்துகளைப் பதிவுசெய்து வாழ்த்தி மகிழ்கிறேன்.!
![]() |
வாழ்த்துரை |
Comments
Post a Comment