ரெட்டமலை சீனிவாசம்

திவான் பகதூர் ரெட்டைமலை சீனிவாசன்:

ஜூலை 7, 1859ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில், தெய்வபக்தி மிகுந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அக்காலகட்டம் நிலவிய பல சாதிக் கொடுமைகளுக்கும் இழிநிலைகளுக்கும் அவர் ஆளாக்கப்பட்டார். எனவே, இந்நிலையை வென்றெடுக்க கல்வியில் அதிக முனைப்பு காட்டினார்.

தமது இனமக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை எதிர்க்க, 1891இல் "பறையர் மகாசன சபை"யை உருவாக்கினார். இதே ஆண்டில் "திராவிட மகாசபை" என்ற அமைப்பை பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் தொடங்கி நடத்தி வந்தார். அதன்பின் இவ்விருவரும் இணைந்து 1892இல் "ஆதிதிராவிட மகாசபை" எனப் பெயர் மாற்றம் செய்து இணைந்து சமூகப் பணியாற்றினர்.

பார்ப்பனர்களின் தந்திரங்களைத் தமது அனுபவத்தில் உணர்ந்த சீனிவாசன் அவர்கள், 'வருமுன் உணரும்' முன்னெச்சரிக்கையால், ஐ.சி.எஸ் தேர்வுகளை ஒரே நேரத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் நடக்க வைக்க இருந்த பார்ப்பனச் சூழ்ச்சியை முறியடித்தார்.

  • 1893 அக்டோபர் மாதம் ‘பறையன்’ என்ற திங்கள் இதழைத் தோற்றுவித்தார். அதன்மூலம் பட்டியல் இனத்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தார்.
  • 1900ஆம் ஆண்டில் வேலை தேடித் தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றார். 1904இல் நெட்டாவில் தனக்கு உற்றதுணையாக இருந்த அந்தோணி பீட்டரின் உதவியால், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகப் பணியிலமர்ந்தார். அச்சமயம் அங்கே வழக்கறிஞராக இருந்த காந்திக்கும் மொழிபெயர்ப்பாளராக இருந்து அவருடன் நெருங்கிப் பழகி வந்தார். காந்திக்குத் தமிழ் மொழியையும் திருக்குறளையும் கற்பித்து, தமிழில் எம்.கே. காந்தி எனக் கையெழுத்திடவும் பழக்கினார். 20 ஆண்டுகள் கழித்து 1921இல் இந்தியா திரும்பினார்.
  • மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின்படி திருத்தம் செய்யப்பட்ட தேர்தலில், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியான பத்துப் பேர்களில் ஒருவராகி 1923இல் சட்டசபையின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
  • 22.08.1924இல் சட்டசபையில், ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தில் பொது இடங்களைச் சாதி இந்துக்கள் எப்படிப் பயன்படுத்துவார்களோ, அதேபோல் அனைத்து தீண்டத்தகாதவர்களும் பயன்படுத்த வேண்டும். இத்தேசத்தில் உள்ள அனைத்து பொதுவுடைமைகளும் அனைவருக்கும் பொதுவானவையே. மேலும் இம்மக்களைப் பள்ளர், பறையர் என அழைக்காமல் ஆதிதிராவிடர் எனக் குறிப்பிட வேண்டும். அத்துடன் மது ஒழிப்புத் தீர்மானம், ஆலய நுழைவுத் தீர்மானம் போன்ற சீர்திருத்தங்களைக் கொண்ட அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும் என மொழிந்தார்.
  • 1930 நவம்பர் 12இல் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இலண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு அந்நாட்டு மன்னர், இந்தியப் பிரதிநிதிகளுக்கு விருந்தளித்த போது, தன் சட்டையில் "நானொரு தீண்டப்படாதவன்" என்று அட்டையில் எழுதி வைத்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகொடுக்க மறுத்தார் என்று பலரும் குறிப்பிடுகின்றனர். ஆனால், இது முற்றிலும் கற்பனையான தகவல்; அப்படியொரு சம்பவமே நடைபெறவில்லையென ஆய்வாளர் கௌதம சன்னா குறிப்பிடுகிறார். இந்த மாநாட்டில் பட்டியல் இன மக்களின் பிரதிநிதிகளாக பாபாசாகேப் அம்பேத்கரும் இரட்டைமலையாருடன் இணைந்து தன் கருத்துகளைத் தெரிவித்தார்.
  • 1931 செப்டம்பர் 7இல் இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்டமேசை மாநாட்டிலும் பட்டியல் இன மக்களின் பிரதிநிதியாகச் சிறுபான்மைக் குழுவின் அறிக்கையுடன் சென்ற அண்ணல் அம்பேத்கருடன் மீண்டும் இணைந்து, ஒரு துணை அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தார்.
  • இரண்டு மாநாடுகளிலும் விரிவாக விவாதிக்கப்பட்ட பின்னர், பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு 1932 ஆகஸ்டு 17இல் இந்தியாவிற்கான புகழ்பெற்ற வகுப்புவாரித் தீர்ப்பை வழங்கினார்.

இருபெரும் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட அந்தக் கோரிக்கைகளே தீர்ப்பாகவும் வந்தது. தனி இட ஒதுக்கீடும் இரட்டை வாக்குரிமையுமே அத்தீர்ப்பின் பிரதான அம்சம். இக்கோரிக்கையின் உள்ளடக்கம் பட்டியல் சமூக மக்களுக்கு மட்டுமன்றி, சிறுபான்மைக் குழுவில் இருந்த முஸ்லீம்கள், கிறித்துவர்கள், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் என அனைவரையும் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது. இத்தீர்ப்பை அறிந்த காந்தி, அந்நேரம் பிரிட்டிசாரால் கைது செய்யப்பட்டு எரவாடா சிறையிலிருந்தார். பட்டியல் இனத்தவர்களுக்கு உரிமைகள் கிடைப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவர், சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து, இந்தத் தீர்ப்பை நீக்கக் கடுமையாகப் போராடினார். அப்போது காந்தியைச் சந்தித்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள், "மகாத்மாஜி, எங்களிடம் எப்பொழுதும் நீங்கள் நியாயமற்ற முறையிலேயே நடந்து கொள்கிறீர்கள்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். காந்தியின் மோசமான அருவருக்கத்தக்க தந்திரத்தால், தீண்டப்படாத மக்கள் தங்களுக்குக் கிடைத்த உரிமையைப் பறிகொடுத்த சோக வரலாறு, உரிமை கேட்டுப் போராடிய தலைவர்களின் கண் முன்னேயே நடந்தேறியது.

இவ்வேளையில் பார்ப்பனியத்தைத் தீவிரமாக எதிர்த்து அனைத்து ஒடுக்கப்பட்டவரகளின் முன்னேற்றத்தைக் காண முனைந்த தந்தை பெரியார் அவர்கள், அண்ணலுக்கும் சீனிவாசருக்கும் ஆதரவாக இருந்தார். காந்தியால் பட்டியல் மக்களது உரிமை பறிபோகும் என 30.08.1931லேயே தன் "குடிஅரசு" பத்திரிக்கையில் விரிவாக எழுதினார்.

இவ்வாறு சமூகநீதி நோக்கில் இயங்கிய இரட்டைமலையாரின் செயல்பாடுகளைப் பாராட்டிய ஆங்கிலேய அரசு,

  • 01.01.1926இல் இராவ் சாகிப் பட்டமும்,
  • 03.06.1930இல் இராவ் பகதூர் பட்டமும்,
  • 01.01.1936இல் திவான் பகதூர் பட்டமும் வழங்கிச் சிறப்பித்து.

தாத்தா இரட்டைமலையார் அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் சாதியால் இழைக்கப்படும் கொடுமைகளைக் களையப் பாடுபட்டு, காந்தியையும் பார்ப்பனியக் காங்கிரசையும் எதிர்த்தே வாழ்ந்து வந்தார். பல ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்து ஒடுக்கப்படம்  மக்களுக்காகத் தீவிரத் தொண்டாற்றினார். அவருடைய நீண்ட வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகவே ஒதுக்கப்பட்டது என்பதே அவரின் பெருமையாகும். இறுதிவரை அம்மக்களது உயர்வுக்காகப் போராடிய அவர் செப்டம்பர் 18, 1945இல் பெரியமேடு எனும் இடத்தில் இயற்கை எய்தினார்.

2000ஆம் ஆண்டில் இந்திய அரசின் தபால் துறை இரட்டைமலை சீனிவாசனாரைச் சிறப்பித்து பாபாசகேப் அம்பேத்கருடன் இணைந்தவாறு வெளியிட்ட தபால் தலை.

இரட்டைமலை சீனிவாசன் குறித்து அறிந்துகொள்ள உதவும் நூல்கள்:

  1. ஜீவிய சரித்திர சுருக்கம் - ஸ்டாலின் ராஜாங்கம் (தொ.) - காலச்சுவடு பதிப்பகம்
  2. இரட்டைமலை சீனிவாசன் - ஜெ. பாலசுப்பிரமணியன் - இந்திய இலக்கியச் சிற்பிகள் - சாகித்திய அகாதமி வெளியீடு
  3. இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு - கோ. ரகுபதி - தடாகம் பதிப்பகம்
  4. ரெட்டமலை சீனிவாசன் எழுத்துகளும் ஆவணங்களும் (தொகுதி 1) - கௌதம சன்னா - ஆழி பதிப்பகம்
  5. இரட்டைமலை சீனிவாசன் தன் வரலாறு - வ.உ.சி நூலகம்
  6. ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு - கள்ளிப்பட்டி சு. குப்புசாமி - புத்தகப் பூங்கா பதிப்பகம்

Comments

Popular Posts