ஊடல் உவகை


விறுவிறுவென
நடையெடுத்தவள்
ஒய்யாரமான மாடிப்படியின்
ஓரமாய் அமர்ந்து கொண்டாள்..
இதை
வினோதமாய்ப் பார்த்த
அவளன்பு மகள்
பின்சென்று முன்நின்று
முகஅசைவில் யாதெனக் கேட்க,
ஒன்றுமில்லையென
அரற்றிய பின்னர்
அப்பா கொடுத்ததாய்
ஐந்து முத்தங்களை
மகளின் கன்னத்திலிட்டாள்..
அடுத்த கணமே
அன்பு மகளும்
ஒன்று இரண்டு எனப் பத்துவரை
எண்ணிக் கொண்டே
மொத்த முத்தத்தையும்
கொடுத்துவிட்டு
அப்பா கொடுக்கச் சொன்னார்
என்றபடி ஓடிவிட்டாள்..

பெருமூச்சு விட்டபடி
செல்லக் கோபத்தைத்
தணித்தவள்
அலைபேசியைத் திறக்க,
கணவனின்
'ஐ லவ் யூ அம்மு'
என்கிற குறுஞ்செய்தி
வெளிச்சத்தால்
கொஞ்சம் கிறுகிறுத்துத் தான்
போனாள்..
காதல் வினா
காதலே விடை..

- அலாதிப் பிரியன்

Comments

Popular Posts