தியாகி கக்கன்
ஊர்: தும்பைப்பட்டி, மேலூர் வட்டம், மதுரை மாவட்டம்.
பெற்றோர்: பூசாரிக் கக்கன், குப்பி அம்மையார்.
"கக்கன்" என்பது அவர்களது குடும்ப தெய்வத்தின் பெயர். ஆண்களுக்கு கக்கன் எனவும், பெண்களுக்கு கக்கி எனவும் பெயரிடுவது வழக்கம். இவர் தனது தொடக்கக் கல்விக்குப் பின், திருமங்கலம் விடுதியில் போராளிகளுடன் ஏற்பட்ட தொடர்பால் சுதந்திர வேட்கை கொண்டு தன் வாழ்க்கை முழுவதையும் பொதுப் பணிக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்து முடித்தார்.
கக்கன் அமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட திட்டங்கள்:
- ஆரணியாற்றுத் திட்டம்,
- மணிமுத்தாறு திட்டம்,
- அமராவதி அணைத்திட்டம்,
- மேட்டூர் அணைத்திட்டம்,
- வைகை அணைத்திட்டம்,
- பூண்டி நீர் ஆய்வு மையம்,
- மண் பரிசோதனை மையம்,
- இந்தோ - ஜெர்மன் திட்டம்,
- அரிசன மக்கள் நலத்திட்டங்கள்,
- கல்வித்துறை,
- காவல்துறை நவீன மயமாக்கல்.
மேலும் கல்வித் தொண்டாக விடுதி கட்டுதல், கல்வி பெற வசதி செய்தல். தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம், கோவில் நுழைவுப் போராட்டம் (மதுரை மீனாட்சியம்மன் கோவில்), குலக்கல்விக் கொள்கை எதிர்ப்புப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் எனப் பல போராட்டங்களின் இடையே வாழ்ந்தவர்.
தன் அமைச்சர் பதவியின் போதும், அதன் பின்னரும் தனக்கான சலுகையைப் பயன்படுத்தித் தானும், தன் உறவினர்களும் வசதியாக வாழ்வதை வெறுத்தவர். தன் தம்பிக்கு கிடைத்த காவல் வேலையையும் நீக்கக் கோரி உத்தரவிட்டவர்.
தன் பதவி முடிந்த மூன்றாவது நாளே பேருந்திற்காகக் காத்திருந்து, பேருந்தில் பயணம் செய்தவர். இறுதிவரை சாதாரண கதர் வேட்டி, ஜிப்பா, கையில் ஒரு பை மட்டுமே. சாதியப் படிநிலையில் பிறப்பினால் மட்டுமே ஒருவர் உயர்நிலையை அடைய முடியும் என்ற கூற்றைப் பொய்யாக்கி, உண்மையை உலகுக்கு உணர்த்திய மகான் தான் தியாகி கக்கன். இவர் தன் இறுதிக்காலம் சுயநினைவிழந்து, மரணப் படுக்கையில் வீழ்ந்தார். அதன்பின் உடல்நலம் மோசமடையவே 23.12.1981 அன்று இயற்கை எய்தினார். அன்னாருக்குச் சமாதி கட்டுவதற்கு அன்றைய அரசு முன்வராததால், அவரது உடல் 24.12.1981 அன்று கண்ணம்மாபேட்டை பொதுச் சுடுகாட்டில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
Comments
Post a Comment