45ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை ஒருங்கிணைத்து நடத்திய 'ஈழத் தமிழ்க் கவிதை நூல்கள்' அறிமுக விழாவில், சிவசேகரம் கவிதைகள் (1973 - 2020) குறித்த நூல் அறிமுகம்.
 |
புத்தகக் கண்காட்சி அரங்கில்..
|
 |
அழைப்பிதழ் |
பேராசிரியர் சிவசேகரம் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் துறை மற்றும் இலண்டன் இம்பீரியல் கல்லூரி இயந்திரப் பொறியியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1970கள் முதலே கலை, இலக்கிய, அரசியல் தளங்களில் இயங்கி தனது எழுத்துகளால் களமாடிய ஒரு படைப்பாளி. கவிதைப் படைப்புடன் சிறுகதை, விமர்சனம், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத் தன்மையுடையவர். சுமார் அரை நூற்றாண்டு காலம் தான்சார்ந்து இயங்கும் துறைக்கும் தமிழ்மொழி இலக்கியத்திற்கும் அவராற்றிய பங்களிப்பு அளப்பரியது எனலாம். சிவசேகரம் அடிப்படையிலேயே இடதுசாரி சிந்தனை கொண்டவர். கடந்த ஐம்பது வருடங்களாக இலங்கை அரசியல், சமூக அவலம், ஒடுக்கப்படும் மக்களின் துயரம், வல்லாதிக்க எதிர்ப்பு, சாதி - மதம் – இனம் – பால் – பொருளாதார வேற்றுமை போன்ற மனித சமூகத்தைப் பாகுபடுத்தும் அத்தனை கருத்துகளுக்கு எதிராகவுமே தனது படைப்புகளை அமைத்துக் கொண்டார். குறிப்பாக, ஒடுக்கப்படும் மக்களின் குரலாய் ஒலிப்பதே இவர் கவிதைகளின் உள்ளீடு. அவ்வகையில் சிவசேகரத்தின் பெரும்பாலான கவிதைகள் அரசியல் உள்ளடக்கம் பொதிந்தே காணப்படும்.
 |
கவிதை நூலின் முன் அட்டை |
ஒரு கவிதையின் சிறப்பு என்னவென்றால், அதை வாசிக்க நேர்கையில் மிக இயல்பாக நம்முடன் பொருந்திப்போவது தான். அவ்வகையில் "உழுபவனே நிலத்திற்குச் சொந்தக்காரன்" எனப் பொதுவுடைமை பாடிய கவிஞர் தமிழ்ஒளி போன்றே சிவசேகரமும் தனது கவிதைகளைக் கட்டமைக்கிறார். நிலமும் நபர்களும் வெவ்வேறாயினும் இருவரின் சிந்தனை ஒன்றுபட்டதற்கு அவர்கள் பின்பற்றிய இடதுசாரி இயக்கமே முக்கியக் காரணமாகும்.பல்வேறு காலகட்டங்களில் வெளியான காத்திரமான எழுத்துகளைத் தான் பேரா. சிவசேகரத்தின் இக்கவிதைத் தொகுப்பு வெளிக்காட்டுகிறது. பொழுதுபோக்கிற்கு எழுதியதாக எதுவொன்றையும் அவரது படைப்புகளில் சுட்டிச் செல்ல முடியாது. தான் கண்ட வலிகளையும், காண வேண்டிய சமூக மாற்றங்களையுமே முழுக்க முழுக்கப் பாடுபொருளாக்கியுள்ளார்.
Comments
Post a Comment