கடல்புரத்தில்..

வண்ணநிலவன்

தமிழில் உருவான ஒவ்வொரு இலக்கியப் படைப்பும் அதன் காலகட்ட மரபோடு பொருந்தி வருவதை, அப்பனுவலின் அமைப்பே விளக்கிவிடும். தொடக்கத்தில் குறிஞ்சி முதல் பாலை வரையிலான ஐந்திணை மாந்தர்களது வாழ்க்கை முறை அகம் (காதல்), புறம் (வீரம்) என்ற பொதுநிலையில் வைத்து பாடப்பட்டு வந்தன. அதன் பின்னர் அம்மாந்தர்களின் நடைமுறை இயல்பினைத் திணை சார்ந்த தனித்தனி இலக்கியங்களும் விவரித்தன. இந்த வரிசையில் பல்வேறு சிறப்புகளும் பெருமைகளும் பொருந்திய நெய்தல் நில இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டுக் காலத்தில் கடல்சார் வரலாறுகளாகவும் கதைகளாகவும் எழுத்தில் பதிவாகத் தொடங்கின.

தொன்மைமிக்க நெய்தல் சமூகத்தின் வேர்கள் சங்க காலத்தில் பாடுபொருளாக நின்று ஏற்படுத்திய தாக்கம், நவீன காலகட்டத்தில் அதன் அடியாழம் வரை சென்றது. “இரங்கலும் இரங்கல் நிமித்தமும்” என்ற உரிப்பொருள் சொல்லாடல், நெய்தல் நில மக்களுக்கென்றே எழுதி வைத்ததைப் போல இன்றும் அவர்களது வாழ்வில் இரண்டறக் கலந்து வருவதை இந்த இலக்கியங்கள் வெளிப்படுத்தி நின்றன. இதனால் நெய்தல் நில மக்களின் வாழ்க்கை நகர்வுகளும் துயரங்களும் எவ்வளவு இன்னல் மிகுந்தது எனபதை அறிந்து கொள்ள முடிந்தது. அந்த வகையில் குறிப்பிடத்தக்கதொரு படைப்பாக 1977ஆம் ஆண்டில் வெளியான, 'கடல்புரத்தில்' நாவலைக் கூறலாம்.

கதைச் சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு ஊர்க் கடற்கரையைச் சார்ந்த மீனவப் பறையர்கள் பற்றியது. தந்தைக்கும் மகனுக்குமான நெருடலுடன் ஆரம்பமாகும் கதைக்களம் குரூஸ் மிக்கேல், மரியம்மை, செபஸ்தி, அமலோற்பவம், பிலோமி, சாமிதாஸ், ஐசக், ரஞ்சி, சிலுவை, தரகனார், பவுலுப் பாட்டா, வாத்தி, பெரிய மாமியா எனப் பலரது இயல்புகளில் ஊடாடிச் செல்கிறது. குரூஸ் மிக்கேலின் மகள் பிலோமி முக்கிய அங்கம் பெற்று கதையை நகர்த்திச் செல்கிறாள். அவள் தன் காதலன் சாமிதாஸ் உடனான மறைமுகச் சந்திப்புகளில் தங்கள் காதலை வலுப்படுத்திக் கொள்ள எண்ணுகிறாள். ஆனால், அச்சந்திப்புகள் அனைத்தும் அவர்களது பிரிவிற்கு மட்டுமே உதவிச் செல்கிறது. காதலனிடம் கற்பை இழந்த பின்பும் அவன் வேறு ஒரு பெண்ணை மணம் புரியச் செல்வதை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்கிறாள். மேலும் கள் குடித்த போதையில் கீழே விழுந்து இறந்துவிட்ட தாயும் சுயநினைவிழந்த தந்தையும் அவளது வாழ்வின் நிலையை மாற்றி விடுகின்றனர்.

இந்தப் பறையர்கள் தங்களுக்கென விதிக்கப்பட்ட அல்லது கட்டமைக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மதித்து நடப்பதை ஒருமுகமாகக் கொண்டிருந்தாலும் மறைமுகமாகச் சில விதிமீறல்களையும் செய்து கொண்டு வருகின்றனர். அதன் பலனாக எண்ணிப் பார்க்கவியலா முடிவுகளையும், நினைத்திராத திருப்புமுனைகளையும் பெற்று விடுவதாகக் கதை முடிவடைகிறது.

உள்ளடக்கக் கூறுகள்

  • இதன் கதைகூறுதல் முறையில் பெரும்பான்மை மானிடர்களின் கூற்றும் சிறுபான்மையாக ஆசிரியர் கூற்றும் காணப்படுகின்றன.
  • பெண் பாத்திரங்களுக்காகவே கதை அமைக்கப்பட்டது போலத் தோன்றினாலும் ஆண்களுக்கான சுதந்திரமும் உரிமையும் பெண்களுக்குத் தரப்படவில்லை என்றே தோன்றுகிறது. அதைச் சமூகத்தின் பொதுவான இயல்பென விளங்கிக் கொள்ளலாம்.
  • வட்டார மாந்தர்களே கதைகூறுவது போல, அவர்களின் வட்டார மொழியிலேயே கதை கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவ சமுதாயத்துக் கலைச் சொற்கள் அதிகம் தெரிய வருகின்றன.
  • கடல் செழிப்பான நாட்களில் வருமானத்தை அதிகரிப்பதையும் அதனை ஏதேனும் ஒரு வழியில் செலவழித்துவிட்டு, வறுமைக் காலங்களில் மிகவும் அல்லற்பட்டு, சிலர் ஊரைவிட்டுச் சென்றுவிடுவதையும் காணமுடிகிறது. ஆக, பொருளாதாரம் மட்டுமே ஒரு சமூகத்தின் வளர்ச்சியை மேம்பாடு உடையதாக மாற்றாது என்பதைக் கதை உணர்த்துகிறது.
  • குறிப்பாக, மரபு வழிப்பட்ட தொன்மங்களே இச்சமுதாயத்தை இயக்கி வருவதாகக் கதைக்களம் வெளிப்படுத்துகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக,

    1. “நல்ல மனைவி இப்படித் தூங்க மாட்டாள் என்று குரூஸ் மிக்கேல் நினைத்தான். புருசன் வீட்டுக்குத் திரும்புகிற வரையிலும் அவள் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருப்பாள். கடலில் அலைகளே இல்லாதிருக்க வேண்டும். காற்றின் உக்கிரம் தணிந்து மீன் பிடிக்கறத்துக்கு ஏதுவாய் இருக்க வேண்டும். வல்லம், பாறைகளில் மோதிவிடக் கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாய் அவர்களுடைய வாழ்வு செழிக்க, ஒவ்வொரு பறைச்சியும் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருப்பாள்.” (பக்; 29)
    2. “கடலுக்குப் போன அப்பச்சியைக் காணலையின்னு தேடிவந்த புள்ளக்கி வழிவுட்டு ஒதுங்கிப் போன கடலில்லா இது…” (பக்; 62)

இதுபோன்ற பல்வேறு கூறுகள் நாவல் முழுதும் காணப்படுகின்றன. மேலும் சாமிதாஸும் பிலோமியும் ஒரே மதத்தினராகவும், ஒரே இனத்தினராகவும் இருக்கின்ற போதும், தங்களது காதல் வாழ்விற்கு பெரும் எதிர்ப்பையே பெறுகின்றனர். பண்பாட்டை அதிகம் வலியுறுத்தாத போதும், தன் காதலன் வேறு ஒரு பெண்ணை மணம் புரிய நேரும் சூழலில் காதலையும் மறக்க முடியாமல், சுய ஒழுக்கத்தினையும் கைவிட முடியாமல் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு வாழ முற்படுகிறாள் பிலோமி.

நிறைவாக

ஒவ்வொரு சமூகத்திலும் பல்வேறு வகையான வாழ்வியல் இன்னல்கள், பாகுபாடுகள், தொழில் முறைகள், மரபார்ந்த நம்பிக்கைகள் போன்ற கூறுகள் நிலவுகின்றன. மீனவச் சமுதாயமும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த நாவலும் அது எழுதப்பட்ட காலத்திற்குரிய வாழ்வியலை உள்ளடக்கியிருந்தது. அந்தவகையில் ஒவ்வொரு நொடிப் பொழுதைக் கழிப்பதும் மிக அபூர்வம் என்ற வாழ்க்கைச் சூழலைக் கொண்ட மீனவ மக்கள் படும் இன்னல்கள், வாய்மொழி வழக்காறுகள், சுதந்திரம் இல்லாத நிலை போன்றவற்றை உணர்வுப் பூர்வமாக ஆசிரியர் இந்த நாவலில் வெளிப்படுத்துகிறார்.

நூலின் அட்டைப் படம்
ஆசிரியர்: வண்ணநிலவன்
வெளியீடு: நற்றிணை பதிப்பகம்
ஆண்டு: 2014
விலை: 90

Comments

Popular Posts