தமிழ் - தமிழர் - தமிழ்ஒளி: பகுதி I
மரபுரீதியாக வழங்கப்பட்டு வந்த பல கருத்துகளைத் தனது முற்போக்குச் சிந்தனையால் தீவிரமாக எதிர்த்தவர்களுள் கவிஞர் தமிழ்ஒளி குறிப்பிடத்தக்கவர். ஆதிக்க வர்க்கம் தனது எழுத்துகளின் வழியும் கதைகளின் வழியும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்தி வந்த போக்கினை, இருபதாம் நூற்றாண்டில் அதன் பாதையிலேயே சென்று மாற்றியமைத்தவர்; அதிகளவில் இலக்கியப் படைப்புகள் சார்ந்து தன்னை முன்னிறுத்திக் கொண்டிருந்தாலும் காத்திரமான சில தமிழியல் ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கிறார். குறிப்பாக, தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் பேசப்பட்டு வந்த சிலப்பதிகாரம் மற்றும் திருக்குறள் குறித்த ஆய்வுகள் அதில் அடக்கம். மேலும் தமிழ் நிலப்பரப்பின் இயக்கத்திற்கு அடித்தளமான மொழி குறித்த ஒப்பீட்டு ஆய்வு ஒன்றையும் மேற்கொண்டுள்ளார். அதன்வழி தமிழர் சமுதாய வரலாற்று ஆய்வு ஒன்றையும் படைத்தளித்துள்ளார். அவ்ஆய்வுகளின்வழி தமிழ்மொழி மற்றும் தமிழ் மக்கள் குறித்த தமிழ்ஒளியின் பார்வையினைக் காணலாம்.
சங்க இலக்கியம் தொடங்கி தற்கால இலக்கியங்கள் வரையிலும் தமிழின் தொன்மை அறுபடாத காட்டாறாய் வெவ்வேறு வடிவங்களாக உருவெடுத்து ஓடிக் கொண்டேயிருக்கிறது. இலக்கிய மரபு ஒருபுறமும் இலக்கண மரபு ஒருபுறமும் அரணாய் நின்று, தமிழின் கட்டமைப்பைச் சில வளைவு சுழிவுகளோடு ஏற்றுக் கடத்திக் கொண்டு வந்துவிட்டன. இந்நிலையில் மேலைத்தேயர்களது வருகை கி.பி.18 மற்றும் 19களில் நிகழ்த்திய பல்வேறு மாற்றங்கள், தமிழியல் ஆய்வுகளைப் பேரளவில் வளர்த்தெடுத்தன. அத்தகைய செழுமையான ஆய்வுகளை வளர்த்தெடுத்ததில் பல மேலைநாட்டவர்கள், இந்தியர்கள் மற்றும் தமிழர்களும் அடங்குவர். அவற்றுள் குறிப்பிடத்தக்க ஆய்வான மொழியியலறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின், ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலால் ஈர்க்கப்பட்டு, தமிழ்மொழி மற்றும் சமுதாயம் குறித்த ஆய்வில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றவராகக் கவிஞர் தமிழ்ஒளி அறியப்படுகிறார். பொதுவுடைமைச் சிந்தனை கொண்ட கவிஞருக்குள் இருக்கும் மிக நுண்ணிய ஆய்வுத் திறத்தை வெளிக்காட்டுவனவாகவே அவரது ஆய்வுகள் காணப்படுகின்றன.
சிலப்பதிகாரம் நாடகமா? காவியமா? (1959), திருக்குறளும் கடவுளும் (1959), தமிழும் சமஸ்கிருதமும் (1960), தமிழர் சமுதாயம் (1961) என்கிற நான்கு நூல்களும் தமிழ்ஒளியின் கூர்த்த அறிவிற்குச் சான்றாய் ஓங்கி நிற்கின்றன. இவற்றில் முன்னிரண்டும் அந்தந்த இலக்கியங்கள் குறித்தும் பின்னிரண்டும் மொழி மற்றும் சமூகம் குறித்தும் விளக்குவனவாய் அமைந்திருக்கின்றன. இங்ஙனம் தமிழ்ஒளி என்கிற பெருங்கவிஞனின் பெயரே அவரது மொழிப் பற்றைக் காட்டிவிடும்; என்றாலும் மேற்சுட்டிய இந்த ஆய்வுகள் அவரைக் காலத்தால் நிலைக்கச் செய்யும்.
தமிழும் தமிழ்ஒளியும்
ஒரு மொழியென்பது தன்னளவில் தொடர்புச் சாதனமாக மட்டுமன்றி, பண்பாட்டுடன் இணைந்த ஒன்றாக உள்ளது. குறிப்பாக, மொழியே ஒவ்வொரு இனத்தையும் அடையாளங்காட்டும் கருவியாக விளங்கி நிற்கிறது. உலகின் ஒவ்வொரு இனமும் நாகரிக வளர்ச்சிக்குப் பின்னர் தங்கள் மொழியையே முதன்மைப்படுத்தத் துவங்கின. அவ்வடிப்படையில் தான், தமிழ் நிலத்தினரும் தங்கள் மொழியை வளர்த்து வந்தனர். அதேவேளை பிறமொழி ஆதிக்கம் உள்நுழையும்போது, அதனை மூர்க்கமாக எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டனர். அப்பின்புலத்தில் பார்த்தோமானால் இன்று சமஸ்கிருதத்தின் தத்துப் பிள்ளையான இந்தித் திணிப்பு வரையிலும் தமிழானது மொழிச் சமர் புரிந்துகொண்டு தான் இருக்கிறது. இன்றைய நிலை இவ்வாறிருக்க வரலாற்றில் சற்று முன் சென்றோமானால், “தமிழ் மரபு என்பதும், தமிழ்த் தேசிய இனவுணர்ச்சி என்பதும் சமஸ்கிருத எதிர்ப்பைக் கொண்டவையே. இது வரலாற்றால் உருவாக்கப்பட்ட நாட்டுப் பண்பு (National Charecter)” (தமிழர் சமுதாயம்; 32) என்கிறார் தமிழ்ஒளி. இக்கூற்றின் அடிப்படையே அவரது எண்ணவோட்டத்தை விளக்கிவிடும். அச்சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் தொகுதியினையே வரலாற்றியலாளர்கள், ‘ஆரியர்’ என்றழைக்கின்றனர்.
தனது ஆய்வில் சமஸ்கிருத மொழியின் தோற்றம் குறித்து விளக்கும் தமிழ்ஒளி, அது வாய்மொழியாகப் பேசப்பட்டு நீண்ட காலம் வரிவடிவம் பெறாதிருந்த மொழி என்றும் அதுவே பண்டைய ஆரியம் என அழைக்கப்பட்டது என்றும் கூறுகிறார். நாவலந் தீவு எனப்படும் பண்டைய இந்திய நிலப்பரப்பிற்குள் புகுந்த அக்கூட்டத்தினர், அங்கு வழங்கிவந்த பைசாசம், தமிழ், பிராகிருதம், பாலி, பிராமி முதலிய தொன்மொழிகளைக் கண்டு அவற்றினின்று பல்வேறு சொற்களை எடுத்துக் கொண்டு தமது பண்டைய ஆரியத்துடன் சேர்த்துச் செப்பனிட்டனர். இம்முயற்சியை வெற்றிகரமாக முடித்து வைத்தவர் பாணினி. இவ்வாறுதான் சமஸ்கிருதம் என்கிற மொழி தோற்றம் பெற்றது; இதன் காரணமாகவே அது இயற்றப்பட்ட மொழி என்ற பொருளைப் பெற்று வருகிறதென்பதும் தமிழ்ஒளியின் கருத்து. இத்துடன் சிலர் சமஸ்கிருதம் திராவிட மக்களால் உருவாக்கப்பட்டது எனக் கூறிய கருத்தினையும், ‘த்ரவிட’ என்பதன் திரிபே ‘தமிழ்’ எனக்கூறிய கால்டுவெல்லின் கருத்தினையும் வன்மையாக மறுக்கிறார். மேற்கூறியதில் பிராமியைத் தவிர்த்த மற்ற அனைத்தும் மொழிகள் என்பது தெளிவு. ஆனால், பிராமி என்பது மொழிகளை எழுதப் பயன்பட்ட ஓர் எழுத்து வடிவம் என்பதனைத் தற்கால ஆய்வுகள் விளக்கியிருப்பது கவனிக்கத்தக்க செய்தியாகும்.
இவ்வாறு முக்கியத்துவம் பெற்றதொரு மொழியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சமஸ்கிருதம், தனது ஆரியக் கூட்டத்தின் இருப்பை நிலைநிறுத்த இந்திய நிலப்பரப்பின் பல மக்கள் தொகுதிகளுடன் சென்று கலந்தது. இதன்வழி கலப்பினங்களையும் கலப்பு மொழிகளையும் தோற்றுவித்தது. “கலப்பினங்களும், கலப்பு மொழிகளும், ‘தேசிய இனங்க’ளாகவும் (Nationalities) ‘தேசிய இனமொழி’களாகவும் உருப்பெற்றன. ஆரிய இனம் இவ்வாறு கலப்பு வெள்ளத்திற் கரைந்தது. எனவே, ஆரியமொழியாம் சமத்கிருதம் எந்தத் தேசிய இனத்தின் மொழியாகவும் மாறவில்லை” (மேலது; 27) என்கிறார். கலப்பின்வழி அது திராவிட நிலப்பரப்பின் அனைத்து அசைவியக்கத்திலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முயன்று கொண்டே இருந்தது. ஆனால், காலப்போக்கில் தனது பல்வேறு முயற்சிகளிலும் தோல்வியுற்று, தனித்தன்மையற்று, பேச்சு வழக்கிழந்து செத்த மொழியாகிப் போனது. அதை மேலும் புனிதப்படுத்தத் தான் அது கடவுளின் மொழி, தேவ பாஷை, சிவபிரானின் உடுக்கையிலிருந்து பிறந்தது என்பது போன்ற கதையாடல்கள் உருவாக்கப்பட்டன. அதனின் ஒரு நீட்சியாகவே தற்காலகட்டத்தில் ஒன்றிய அரசின் மொழி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டையும் உற்றுநோக்கலாம். எது எவ்வாறாயினும் “திராவிடச் சாரம் பருகிச் சமத்கிருதம் வளர்ந்தது என்பது கொண்டு, அது திராவிட மொழியாகாது. ஒரு மரத்தின் சாரம் பருகி வளர்ந்த புல்லுருவி எவ்வாறு அம்மரத்திற் கினமாகாதோ, அவ்வாறே சமத்கிருதமும் திராவிடத்திற்கு இனமாதல் இல்லை” (மேலது; 30) என்பது தமிழ்ஒளியின் கருத்து.
எனினும் இந்த வாதமானது காலனிய ஆய்வாளர்களின் ஆய்வுப் பரப்பில் உவப்பான கருத்தாக்கமாக இல்லை. மாறாக, ஆரிய / ஐரோப்பிய இனமே ஆளப்பிறந்த இனம், சமஸ்கிருதமே தலைசிறந்த மொழி என்ற கற்பிதம் தீர்க்கமாக நம்பப்பட்டு ஐரோப்பியர்களால் கல்வித் தளத்தில் பரப்பப்பட்டு வந்தது. வில்லியம் ஜோன்ஸ் என்பார் முன்வைத்த ஆரிய இனத்தின் மேன்மைக் கருத்தாக்கம் மாக்ஸ்முல்லர் போன்றோரால் கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டு, பலரையும் இந்த ஆய்வை நோக்கி உள்ளிழுத்தது. அதுவே, இந்திய நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்களுக்குத் தலைமையே ஆரியர்கள் தான் எனக் கூறுமளவிற்குக் கொண்டு சென்றது. ஆனால், இன்றோ “ஆரிய இனம் பல்வேறு இனங்களில் கலந்துவிட்டதால் ஆரியர் என்ற ஒரு மானிடவியல் இனம் இருந்ததில்லை என சிலர் கூறும் சூழல் ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனாலும், இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்று ஒன்று உள்ளதை யாராலும் மறுக்கமுடியாது. மொழியியல் ரீதியாக தனித்தன்மை வாய்ந்த வேர்ச்சொற்களை பொதுவானதாகக் கொண்ட இம்மொழிகளை வெவ்வேறு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என விளக்கிடவும் முடியாது. இன்று இம்மொழிகளைப் பேசும் மக்கள் பல்வேறு மானிட இனங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். எனினும் இவற்றில் ஏதோ ஓர் இனம் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குரிய மூல இனமாக இருந்திருக்க வேண்டும் என்ற ரீதியில் ஆய்வுகளை நாம் மேற்கொள்ள முடியும்” (த. தங்கவேல்; 2015: 33) என்ற கருத்து ஆரிய மொழி / இனம் குறித்த ஆய்வின் அடுத்தகட்ட நிலையை வெளிப்படுத்துகிறது.
அது ஒருபுறமிருக்க, இன்று பெருமளவில் பயன்பாட்டில் இல்லாத பேச்சு வடிவமற்ற சமஸ்கிருதம் பிறமொழிப் பரப்பிற்குள் நுழைந்தால், அதனை எந்தளவிற்குக் காவு வாங்கிவிடும் என்பதற்குத் தெலுங்கும் கன்னடமுமே நம் கண்முன் சாட்சியாகி நிற்கின்றன. அம்மொழிகளைப் போல் பண்டைத் தமிழ் நிலத்தின் ஒரு பகுதியான கேரளமும் தம் கொடுந்தமிழ் வழக்கில் சமஸ்கிருதக் கலப்பினை ஏற்றதால், பேரளவில் மாறுதலுக்குட்பட்டு மலையாளமாகி நின்றது எனச் சாடுகிறார். மலையாளத்தில் இன்றளவில் சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் ஓங்கியிருப்பதை மொழி வல்லுநர்கள் அறிவர். இந்தநிலை தமிழுக்கும் நேர்ந்துவிடக் கூடாதென்பது தான் பலரின் எண்ணமும் ஆகும். ஆனால், பிற்காலச் சைன, வைணவச் சமயவாதிகளால் அந்த முயற்சியும் தொடங்கப்பட்டது என்பதைத் தமிழ்ஒளி தெளிவாக விளக்குகிறார். “சைன நெறியைப் பின்பற்றிய முற்காலத்தவர், சிறந்த நாட்டுப் பற்றாளராய் விளங்கவும், பிற்காலச் சைனர் சமயப் பற்றாளராய் மட்டுமே விளங்கினர். எனவேதான், முற்காலத்துத் தோன்றிய சமண நூற்களில் சமத்கிருத ஆதிக்கத்திற்கு வழிகோலப் படவில்லை” (தமிழர் சமுதாயம்; 22) என்பதன்வழி மொழியில் சமயங்கள் நிகழ்த்திய மாற்றங்களைக் கவனப்படுத்துகிறார். இக்கருத்தினை மிகத்தெளிவாக உணர்ந்து கொண்ட சைவம் மட்டுமே தமிழை முதன்மைப்படுத்தி நகர்ந்தது.
ஆக, ஆரியக் கொள்கைக்கு நேர் எதிரியான சைன மதமும் ஒரு கட்டத்தில் சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டுத் தமிழகத்தில் நலிவைச் சந்தித்தது. இவ்வாறு, ஆரிய இனமும் அவர்களது மொழியும் பண்டைத் திராவிட இன அழிவிற்கும் பண்டைத் தமிழ் நில அழிவிற்கும் கால்கோளியது. ஆக, சமஸ்கிருத ஆதிக்கத்திற்கெதிராக வரலாற்றால் உருவாக்கப்பட்ட எதிர்ப்புணர்ச்சி வெறும் போலியான புறச்சார்புடையதல்ல; தெளிந்த அகச்சார்புடையதாகும். எனவே, அதனை எந்தநிலையிலும் எதிர்த்தல் நமது கடமை என்பதே தமிழ்ஒளியின் நிலைப்பாடு.
Comments
Post a Comment